Friday, February 24, 2012


அறிவியல் ஆயிரம்

வண்ண வண்ண ஆடைகளை

நவக்கிரகங்களுக்குச் சுற்றி
கோள்கள் ஒன்பதென
சூளுரைத்துச் சொன்னதிலிருந்தது
வானியல் தொலைநோக்கு.
காய்களையும் கறிகளையும்
அதனதன் பண்புணர்ந்து
சரியான சேர்ப்புடன்
சரிவிகத உணவாய் அளித்ததில்
உணவே மருந்தானது.
சுக்கும் மிளகும் திப்பிலியோடு அரைபட‌
வாஞ்சையோடு வழங்கப்பட்ட
கசாயங்களிடம் கட்டாயம் தோல்வியுறும்
அதிநவீன மருந்துகள்.
ரசாயங்களை விஞ்சும்
சாணக் கரைசலை மருந்தாக்கி
வீட்டு வாயிலில் தெளிப்பதில்
நுழையாதிருந்தன நுண்கிருமிகள்.
இவ்வாறாக‌
ஆயிரமாயிரமாய் இருந்தன‌
அறிவியலின் விழுமியங்கள்
'அ'ன்னா 'ஆ'வன்னா அறிந்திடாத‌
முன்னோர்களின் மூளைகளில்
.

பாவையர் மலர்- பிப்ரவரி 2012 இதழுக்காக நடத்திய "அறிவியல் ஆயிரம்"
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை.

Wednesday, February 15, 2012




விரைவில் வெளிவருகிறது
கவிஞர் ச.கோபிநாத்தின்
புதிய ஹைக்கூ நூல்

வாழ்வை சாதாரணமாய் கடந்து செல்லும் நம்மை சிந்திக்கவும்
அதன் அழகியலை உணரவும் செய்யும் ஹைக்கூ கவிதைகள்...


வாசிக்க சில....

*
புத்தகத்தில் இருப்பதை
மூளையில் ஏற்று
மெக்காலே முறை

*
நிலா
முற்றம்
ஏக்கத்தில் குழந்தைகள்


வாசகன் பதிப்பக வெளியீடு


நட்பின் அரிதாரம்

பச்சையம் தவிர்க்கும்
கலப்பின தாவரமென
விலக்க முயல்கிறேன்
உன்னோடு வாய்த்த என தந்த பொழுதுகளை.

கண்ணுக்கு புலப்படும் தொலைவில்
நிராதரவுற்று நிற்கும் தனிமை
வெம்மையின் கணைகளை தொடுத்தபடி
சுமைகூட்டிக் கொண்டிருக்கிறது
கனத்திருந்த மனப்பரப்பை.

சங்கடங்களினூடே
குற்றவுணர்வுகளால் ததும்புகிறது
தளர்வை புறந்தள்ளி
இறுக்கமுற்ற இதயம்
நிரந்தரமின்மைகளின்
சுவடுகளை தொட்டசைத்தவாறு
பற்றிக் கொள்ள முயலும்
எனதான கரங்களை உதறியபடி
துகளென துளிர்த்து
கடலென பெருக முயல்கிறது
அகோரப் பசியுற்றிருக்கும்
என் மீதான உன் பகைமை
நட்பின் அரிதாரம் பூசி.

ச.கோபிநாத்

நன்றி : வடக்கு வாசல் இணையதளம்

Friday, February 10, 2012


என் இரவுகளின் நீளத்தை
அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன‌
உன்னுடனான என் பொழுதின் நினைவுகள்.
அசைபோடப்படும் நினைவுகள்
உறுத்தலையும் சங்கடங்களையும்
பரிசாக அளிக்கின்றன.
பரிசு மகிழ்வோடு 
ஏற்றுக்கொள்ளப்படாதவையெனினும்
அதை விரும்ப எத்தனிக்கிறது
நினைவுகளை மீண்டும்
நெஞ்சில் நிறுத்த முயலும் விருப்பம்.

ச.கோபிநாத்